திருச்சி கல்லணை பகுதியில் உள்ள மணல் குவாரிகளை மூடக்கோரும் மனுவுக்கு பதிலளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரி நேரில் ஆஜராகி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அகில பாரத இந்து மகா சபாவின் மாநிலத் தலைவர் ராஜசேகர் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருவளர் சோலை, திருவானைக்காவல், கொண்டையம் பேட்டை ஆகிய கிராமங்களில் மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் இங்கு இரவு, பகலாக மணல் அள்ளப்படுகிறது. மேலும் ஒரு குவாரிக்கு 2 பொக்லைன் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியையும் மீறி ஒரு குவாரிக்கு 8 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது.
மேலும் குவாரிகளுக்கு அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லணை அமைந்து உள்ளது. மணல் குவாரிகளால் இந்த அணைக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் நீலத்தடி நீர் குறைந்து வருவதால் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் குவாரிகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மணல் குவாரிகள் தொடர்புடைய பொதுப்பணித் துறை அதிகாரி பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்காதது ஏன்? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆக.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.