திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உலக நலன்வேண்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை ந டத்துவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் திருவாச்சி மண்டபத்தில் பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை செய்யப் பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் கம்பத்தடி மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆஸ்தான மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் கவிதாபிரியதர்சினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி: பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும், உலக நலன் வேண்டியும், மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ் மனைவி சுனிதா குத்துவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். அறக்கட்டளை உபயதாரர் மகாலெட்சுமி தர்மராஜ், கல்லூரி உபதலைவர் எஸ்.ராஜகோபால், செயலர் எம்.விஜயராகவன், பொருளாளர் எல்.கோவிந்தராஜன், உதவி செயலர் ராஜேந்திரபாபு, முதல்வர் எஸ்.நேரு, இயக்குனர் ராஜாகோவிந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.