திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள கண்மாய், கால்வாய் உள்ளிட்ட நீர் வழித்தடங்களை சீர்செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் ஜி.சரவண பெருமாள் தலைமை வகித்தார். சமூகத் திட்ட பாதுகாப்பு வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்த செந்தில்குமார் பேசுகையில், வேடர்புளியங்குளம் வழியாக ஆஸ்டின்பட்டிக்கு செல்ல கண்மாய்க் கரையை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் கரை வழியாக செல்லமுடியாதவாறு பல இடங்களில் பள்ளங்களாக உள்ளன. அதனை சீரமைக்க வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்றுத்தற பலமுறை கோரிக்கைவைத்தும் கிடைக்கவில்லை. எனவே பயிர்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்பழஞ்சியை சேர்ந்த சிவராமன் பேசுகையில், தென்பழஞ்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே எங்கள் ஊர் வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார்பேருந்து நிலையத்தில் இருந்து தென்பழஞ்சி வழியாக திருமங்கலம் செல்லும் 53-ஆம் எண் பேருந்து கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் தென்கால் கண்மாய், பானாங்குளம், கூத்தியார்குண்டு கண்மாய் உள்ளிட்ட பிரதான கண்மாய்களைத் தூர்வாரவும், வாய்கால் களை சீரமைக்கவும் பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் துணை வட்டாட்சியர் குணசேகரன் வரவேற்றார். வேளாண்மை, பொதுப்பணி, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.