மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இரண்டாவது திருமணம்செய்த மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மாமனார் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வாழ்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ்(57). இவர் தனது மகளை, தங்கை மகனான ராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது ராஜா வேறு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், சவுடார்பட்டியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது போராட்டம் நடத்தினார். அப்போது, தனது மகள் வாழ்க்கையை சீரழித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினார்.
இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பேரையூர் காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜ், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் பால்ராஜ் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.