அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஓராண்டிற்குள் கேத் லேப்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை, மதுரை, கோவையைத் தவிர பிற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான கேத் லேப் மற்றும் ஹார்ட் லங்க் இயந்திரங்கள் நிறுவப்படாமல் உள்ளன.
இதனால் இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான கேத் லேப் மற்றும் ஹார்ட் லங்க் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த சி. ஆனந்தராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 9 மருத்துவமனைகளில் மட்டுமே கேத் லேப் வசதிகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கேத் லேப்களை ஓராண்டிற்குள் அமைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.