காவல் துறையினர் பின்தொடர்ந்து உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதாக, ஆயுதப் பயிற்சி வழக்கில் தண்டனை பெற்றவர் புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேக் (51). பெரியகுளம் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காவல் துறையினர் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். அதன் விவரம்:
ஆயுதப் பயிற்சி கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு கடந்த மே மாதம் விடுக்கப்பட்டேன். அன்றைய தினத்தில் இருந்து கியூ பிரிவு போலீஸார் நான் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வருகின்றனர். நான் சந்திக்கும் நபர்களையெல்லாம் அச்சுறுத்தி அவர்களிடம் நான் தீவிரவாதி என்னுடன் பேசவேண்டாம் எனக் கூறி சமூகத்தில் இருந்து என்னைத் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்றபோதுகூட, அதே பேருந்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். கோரிப்பாளையத்தில் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரை மிரட்டி, என்னை வீட்டை காலி செய்வதற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் கடுமையான மனஉளைச்சலும், சமூக-பொருளாதார ரீதியான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது இயல்பான வாழ்க்கையைத் தொடர உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.