ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி 1-ஆம் மண்டலம் வார்டு 2 மற்றும் வார்டு 23-க்கு உட்பட்ட ஆரப்பாளையம் பேருந்து நிலையம், அஞ்சல் நகர், விளாங்குடி பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். விளாங்குடி பகுதியில் அமைக்கப்படும் பேவர் பிளாக் சாலை, தார்ச்சாலை உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வாய்க்கால்களைச் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். விளாங்குடி பேருந்து நிறுத்தத்தில் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தி வந்த தனி நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இப் பகுதியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்படும் வரும் நூலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட ஆணையர், கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து மைய நூலகத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
மாநகராட்சி அனுமதித்ததைக் காட்டிலும் கூடுதலாக வைக்கப்பட்டிருந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், அவ்வாறு இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையில் சேதமடைந்த சாய்வு தளத்தை சரிசெய்ய அறிவுறுத்தினார்.
உதவி ஆணையர் அரசு, நகர் நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.