உலகத் தமிழர்களின் பண்பாடு, கலை, சடங்கு முறைகள், பழக்க வழக்கம் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வது அவசியம் என்று ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழக முன்னாள் தலைவர் திருப்பதி நாச்சியப்பன் வலியுறுத்தினார்.
புலம்பெயர் தமிழர்களின் இலக்கியப் பணிகள் என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்க கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் திருப்பதி நாச்சியப்பன் பேசியது:
புலம்பெயர்ந்த தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களது மொழியையும், பண்பாட்டையும் விட்டுக் கொடுப்பதில்லை. ஹாங்காங்கில் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழர்கள் வாழ்ந்தாலும், மொழிக்கும் பண்பாட்டிற்கும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக அளித்து வருகின்றனர்.
மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்தி வருகிறது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் ஹாங்காங் வாழ் தமிழ் குழந்தைகளுக்காக 2 மணி நேரம் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உலகெங்கும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, வியத்நாம், கம்போடியா, கொரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ்ச் சொற்கள், உணவு, பழக்க வழக்கம், பண்பாடு, சடங்குமுறைகள் பலவற்றில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவை குறித்து ஆய்வு மேற்கொள்வது அவசியம் என்றார்.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையர் ஜ.ஜான்சிராணி, ஆய்வறிஞர் சு.சோமசுந்தரி ஆகியோர் பேசினர்.