மதுரை நகரில் கலப்புத் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க சிறப்புத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை நகரில் கலப்புத் திருமணம் செய்தவர்களை அச்சுறுத்தல், பயமுறுத்துதல், தீங்கு விளைவித்தல் மற்றும் கௌவரக் கொலைகள் செய்தல் போன்றவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்திட உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு), மதுரை மாவட்ட சமூகநல அலுவலர் மதுரை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்புத் தனிப் பிரிவு செயல்படும்.
மாநகரக் காவல் ஆணையரின் அறிவுரைப்படி சமூகத்தில் கலப்புத் திருமணம் செய்து பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து புகாரைப் பெறுவதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவும், புகாரை விசாரிப்பதற்கு கடும் குற்றப்பிரிவு (சீரியஸ் கிரைம்) ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் தகவல்களை பெறுவதற்கும் தொலைபேசி எண் 0452-2346302 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.