நான்காவது நாளாக தொடரும் போராட்டம்: பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஊர்வலம்
பணி வாய்ப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் வியாழக்கிழமை கண்டன ஊர்வலம் நடத்தினர்.
சென்னையில் நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் நடைபெற்ற மருத்துவர் பணியிட கலந்தாய்வில், அரசு மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கார்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு
பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை வெளிப்படையாக அறிவித்து இடமாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும். வரும் 2018-ஆம் ஆண்டு தேர்வெழுதும் முதுநிலை மாணவர்களுக்கான பணியிட கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. இதில் அரசு மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை காலை ஊர்வலமாக புறப்பட்ட மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வமாக புறப்பட்டு அரசு மருத்துவமனையை வந்தடைந்தனர். ஊர்வலத்தின்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்.