மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட காவல் பெண் ஆய்வாளர், காவலரைத் தாக்கிய வழக்கில் தேடப்பட்ட இரு ராணுவ வீரர்கள் மதுரை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
திருமங்கலம் தாலுகா காவல்நிலைய பெண் ஆய்வாளர் அன்னமயில், காவலர் பாலமுருகன் ஆகியோர் சாத்தங்குடி பகுதியில் நவம்பர் 22-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது சாத்தங்குடி பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் கார்மேகம் (31), கருப்பசாமி (30) ஆகியோரைத் தட்டிகேட்டுள்ளனர்.
இதில் ஏற்பட்டத் தகராறில் காவலர் பாலமுருகனை இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கினர். இதைத் தடுக்கச் சென்ற ஆய்வாளரை அன்னமயிலை அவர்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர்கள் இருவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், ராணுவ வீரர்கள் கார்மேகம், கருப்பசாமி இருவரும் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் (எண் 5)-இல் வியாழக்கிழமை சரணடைந்தனர். இருவரையும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நடுவர் சபீனா உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.