ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் சிறப்புக் கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டல கடவுச்சீட்டு அலுவலர் த. அருண்பிரசாத் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பின்படி இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரைக்கு பதிவுகள் தொடங்கியுள்ளது. 2019 பிப்ரவரி வரை செல்லுபடியாகும் இயந்திரத்தால் வாசிக்கக் கூடிய கடவுச்சீட்டு இருப்பவர்களிடம் மட்டுமே ஹஜ் கமிட்டி விண்ணப்பங்களைப் பெறுகிறது.
ஹஜ் யாத்திரை செல்வோரது கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலனை செய்து கடவுச்சீட்டு வழங்க மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, ஹஜ் யாத்திரை செல்லும் பொதுமக்கள் கடவுச்சீட்டுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு இணையதளம் வழியாக முன்தேதி கிடைப்பதற்கு தாமதம் ஆகும்பட்சத்தில், மதுரை கோ.புதூர் பாரதி உலா சாலையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு நேரியாக வந்து முன்தேதி பெற்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இதற்கென தனி கவுன்ட்டர் மற்றும் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹஜ் யாத்திரை செல்வோர் தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் நிலை தொடர்பாகவும் இந்த சிறப்பு கவுன்ட்டரில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.