மதுரையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாவதை தடுக்கும் வகையில் 5 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் 3 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார்.
மதுரையில் பொன்மேனி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ரூ. 1.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய பூங்காக்கள் மற்றும் பள்ளிகளுக்கான கூடுதல் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மாநகரங்களில் காலியாக உள்ள அரசு மற்றும் மாநகராட்சிகளுக்கான காலியிடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகக் கூடாது என அந்த இடங்களில் பூங்காக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் 5 பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது மூன்று இடங்களில் பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன. அடல் மிஷன் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றம் (அம்ருத்) திட்டத்தில் ஜெய்நகர், கீழ்மதுரை, எல்லீஸ்நகர் பகுதிகளில் இப்பூங்காக்கள் அமைந்துள்ளன. அழகர்கோவில் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்காவில் நவீன வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
பீபீகுளம் பகுதியில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
மக்களுக்கான திட்டங்களை அதிமுக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இத்திட்டங்களே சாட்சி என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், வடக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி. ராஜன்செல்லப்பா, நகர்ப்பொறியாளர் ஏ. மதுரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.