மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஸ்கந்தகுருவித்யாலயா சார்பில் சிவதீட்சைப் பெருவிழா நடைபெற்றது.
சைவ சமய பக்தர்கள் மற்றும் சைவத் திருத்தலங்களில் பூஜையில் ஈடுபடுவோர், சிவத்தொண்டாற்றுவோருக்கு ஆண்டுதோறும் சிவதீட்சை அளிப்பது வழக்கமாக நடந்து வருகிறது. மதுரை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் செயல்படும் ஸ்ரீஸ்கந்தகுருவித்யாலயா சார்பில் தீட்சை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் தீட்சை வழங்கும் பூஜை சனிக்கிழமை தொடங்கியது. யாக குண்டம் அமைத்து பூஜைகள் நடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை யாக பூஜைகளுடன், பஞ்சாட்சர மந்திரங்கள் உபதேசம் நடைபெற்றது. பின்னர் நாம கீர்த்தனைகள், சிவ இன்னிசைகள் நடைபெற்றன. இதில் திருப்பரங்குன்றம் குருகுலம் மாணவர்கள், சிவ பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது 36 பேருக்கு சிவதீட்சை அளிக்கப்பட்டதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.