புதிதாக உருவாக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை சிறப்புக் கலந்தாய்வு மூலமே நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்டக் கிளை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அப்துல்லத்தீப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: கணினி ஆசிரியர்களுக்காக புதிதாக அரசு 765 பணியிடங்களை உருவாக்கியுள்ளது. அதில் பணியிட மாறுதல் சிறப்புக் கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்கும் நிலை உள்ளது. அங்கும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலேயே கற்பிக்கப்படுகிறது. எனவே கணினி பயிற்றுநர் பணியிடங்களை முதுகலைப் பயிற்றுநர் பணியிட நிலைக்கு மேம்படுத்துவது அவசியம். பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி பயிற்றுநர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட பொருளாளர் பரமசிவம் சங்க செயல்பாடுகளை விளக்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். இணைச்செயலர் பார்கவநாராயணன் நன்றி கூறினார்.