முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி, தோல்வி முறையை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதன் மூலம் கற்றல் திறனும், கற்பிக்கும் திறனும் சீரழிகிறது. எனவே அந்த வகுப்புகளில் மீண்டும் தேர்ச்சி, தோல்வி முறையை அமல்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் செல்வி தலைமை வகித்தார். அகில இந்திய மகளிர் கலாசார சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஹில்டாமேரி வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலர் வால்டேர் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.