மதுரை வில்லாபுரத்தில் தெருக்களில் கழிவுநீர் ஓடுவதை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி 62 ஆவது வார்டுக்குள்பட்ட பகுதி மீனாட்சி நகர். இங்குள்ள மார்கன் தெருவில் கடந்த சில நாள்களாக கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் குடிநீர் குழாய்களிலும் இந்த கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனைக் கண்டித்து இப்பகுதியினர் 100-க்கும் மேற்பட்டோர் வில்லாபுரம் ஆர்ச் பகுதி, மதுரை- காரியாபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த உதவி ஆணையர் முத்துக்குமார், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நல்லூ ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் தேங்குவது சரி செய்து தரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.