புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஜாக்டோ ஜியோ) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பாளர்கள் சுப்பையன், முருகன், உக்கிரபாண்டி, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் சுப்பிரமணியன், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் எம்.பி.முருகையன், தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கிருஷ்ணன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கப் பேசினர். மாவட்டம் முழுவதும் இருந்து அரசு ஊழியர் சங்கத்தினர், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு துறைவாரி சங்கங்களைச் சேர்ந்தோர், பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி உடனடியாக வெளியிடுவது, ஊதிய மாற்றத்தில் 20 சதவீதத்தை 2016 ஜன.1 முதல் கணக்கிட்டு இடைக்கால நிவாரணமாக அளிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.