அவனியாபுரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்ததைக் கண்டித்து, திங்கள்கிழமை மாநகராட்சி குடிநீர் மையத்திற்கு பொதுமக்கள் பூட்டுப்போட்டு தண்ணீர் லாரியை சிறை பிடித்தனர்.
மதுரை மாநகராட்சி 94- ஆவது வார்டு எம்.எம். சி. காலனியை அடுத்த கற்பக நகரில் கடந்த மாதம் பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்காக மாநகராட்சி சார்பில் 13 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், அந்த குடிநீர் மையத்திலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன் குடிநீர் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வரவில்லையாம். இதையடுத்து அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலையில் குடிநீர் மையத்துக்கு பூட்டு போட்னர்.
மேலும் அங்கு தண்ணீர் ஏற்ற வந்த லாரியையும் சிறை பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நல்லு பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்.
அதில் 15 நாள்களுக்கு தாற்காலிகமாக குடிநீர் மையத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்படமாட்டாது என உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.