தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கட்சி குறித்து விமர்சனம் செய்தவர்களும் பாராட்டத்தக்க வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
மதுரையில் வரும் 30ஆம் தேதி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அதிமுக அம்மா அணி மற்றும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
விழா குறித்து அதிமுக அம்மா அணி மதுரை புறநகர் மற்றும் மாநகர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புறநகர் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது:
மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாபெரும் விழாவாக நடத்துவது அதிமுகவினரின் கடமையாகும். கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு விழாவை நடத்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க வேண்டும். நம்மை விமர்சிப்பவர்கள் வியக்கும் வகையில் விழாவை நடத்தவேண்டும் என்றார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:
அதிமுக எனும் கட்சியைத் தொடங்கி சாமானியனுக்கு அரசியல் பதவியை பெற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் கட்சியை மேம்படுத்தி சாமானிய மக்களை வாழ வைத்தவர் ஜெயலலிதா. ஆகவே அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த விழாவை நடத்துவது அதிமுகவினரின் கடமை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கேலி செய்வோர் வியக்கும் வகையில் நாம் எம்.ஜி.ஆர். விழாவை சிறப்பாக நடத்தவேண்டும் என்றார்.