அதிமுகவில் அம்மா அணி துணைச்செயலர் டி.டி.வி. தினகரனை எதிர்த்து அரசியல் நடத்துவோர் யாராக இருந்தாலும் பதவியில் நீடிக்க முடியாது என அக்கட்சியின் கர்நாடக பிரிவு செயலர் புகழேந்தி கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செங்கோல் வழங்கி அவரது அரசியல் பயணத்தை தொடங்கிவைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வான செங்கோல் வழங்குதலை நினைவுகூரும் வகையில் எம்.ஜி.ஆரிடமிருந்து ஜெயலலிதா செங்கோல் பெறுவது போன்ற வெண்கலச் சிலையை மதுரையில் நிறுவ கட்சித் தொண்டர்கள் விருப்பப்படுகின்றனர். ஆகவே சிலை அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கட்சியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனை கட்சிப் பணியிலிருந்து விலக்கிவைப்பதில் சில அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக வரும் செய்திகள் நம்பத்தகுந்தவை அல்ல. ஆனால், அப்படி யாராவது நினைத்தால் அவர்கள் பதவியில் நீடிக்க முடியாது என்பது மட்டும் உண்மை என்றார்.