உசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
உசிலம்பட்டி 11ஆவது வார்டு வடக்காட்டுபட்டிக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை. இதுகுறித்து நகராட்சியில் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையர் சுப்பையா, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.