மதுரையில் தங்கும் விடுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி களிவந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துரை மகன் கிருஷ்ணமூர்த்தி (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன இயந்திர பொருத்துநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் குளிர்சாதன இயந்திரம் பொருத்தும் பணியில் கிருஷ்ணமூர்த்தி ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று கட்டடத்தின் மேல்தளத்தில் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வெகுநேரமாக கீழே வரவில்லை.
இதையடுத்து சக தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது தவறி விழுந்து நினைவிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கிருஷ்ணமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் பழனி (35) அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.