கரூர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24-இன் விதிகளின்படி அரசு குற்றவியல், உரிமையியல் வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி ஆகியோர் ஆலோசனை செய்து அரசு வழக்குரைஞர்களாக பணியாற்ற தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்பவேண்டும். ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமலும், விருப்ப மனுக்கள் பெறப்படாமலும், முறையாக ஊடகங்களில் விளம்பரம் வெளியிடாமலும் நீதித்துறைக்கு சம்பந்தம் இல்லாத கட்சிக்காரர்கள் மூலம் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சட்டத்தை பின்பற்றாமல் அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டால் திறமையற்றவர்கள், குற்றப்பின்னணி உடையவர்கள் அரசு வழக்குரைஞர்களாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும், அதுவரை அரசு வழக்குரைஞர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி. விக்டர் ஆண்டோ, கரூரைச் சேர்ந்த வழக்குரைஞர் கே. மகுடீஸ்வரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்களை நியமிப்பதில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், கரூர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களின் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் வகுக்கப்பட்ட விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே கரூர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.