மதுரையில் தேவாலய கழிப்பறையில் கிடந்த பெண் சிசுவை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மதுரை கீழவெளிவீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தினசரி மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பிரார்த்தனை முடிந்தவுடன், பெண்கள் சிலர் அங்குள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிவறைக்குள் சென்று பார்த்தபோது, பிறந்த 3 நாள்களே ஆன பெண் சிசு துணியில் சுற்றிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தினர் அளித்தத் தகவலின் பேரில் விளக்குத்தூண் போலீஸார் அங்கு சென்று குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தேவாலய நிர்வாகி அதிசயம் அளித்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தையை விட்டுச் சென்ற பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.