திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் மக்கள் நலப்பதிப்பகம் தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநகர் டவுன்கிளப்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கவிஞர் ப.மோகன்தாஸ், ஹார்விபட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் பொன்.விக்ரம் வரவேற்றார்.
பத்திரிகையாளர் திருமலை எழுதிய உடல்நலத்திற்கான கீரை வகைகளும் சமைக்கும் முறைகளும் என்ற நூலை நல்லாசிரியர் வேலாயுதம் வெளியிட, கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.
பதிப்பாளர் மருத்துவர் ஜி.பி.ஹனிமன், நூலாசிரியர் திருமலை ஆகியோர் ஏற்புரையாற்றினர். டவுன்கிளப் செயலர் ஜெயக்கொடி, வாசகர் வட்டத் தலைவர் மு.செல்லா, கவிஞர் ஜீவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கவிஞர் ஞான ஆனந்தராஜ் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.