புதுதில்லியில் நடைபெற்று வரும் தல்சைனிக் என்.சி.சி சிறப்பு முகாமில் பங்கேற்பதற்காக 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கடந்த வாரம் என்.சி.சி. சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 500 பேர் பங்கேற்றனர். இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்ட 40 மாணவர், 40 மாணவியர் புதுதில்லியில் நடைபெற்று வரும் தல்சைனிக் பயிற்சி முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதுதில்லியில் அடிப்படை ராணுவப் பயிற்சி, கூடாரம் அமைத்தல், வரைபடம் அறிதல், துப்பாக்கி சுடுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
தேர்வான வீரர்களை மதுரை என்.சி.சி. 7 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் உஜல்சிங், மன்னர் கல்லூரி செயலர் எம்.விஜயராகவன், உபதலைவர் ராஜகோபால், உதவி செயலர் ராஜேந்திரபாபு, முதல்வர் நேரு, என்.சி.சி. அலுவலர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் பாராட்டினர். தேர்வான வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.