மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் பேராசிரியர் பி.பி.செல்லத்துரை கூறினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதுமுக வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் காமராஜர் பல்கலைக் கழகத்தை 200 இடங்களுக்குள் இடம் பெறச்செய்யும் வகையிலே புதுமுக வகுப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. கற்பித்தலில் ஆசிரியர்களின் திறனை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தும் வகையில் புத்தாக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க மானியக்குழு அனுமதித்துள்ளது. ஆகவே, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு விரைவில் ஊதியத்தை உயர்த்தி வழங்கவுள்ளோம்.
உறுப்புக் கல்லூரிகளில் ஐ.ஏ.எஸ். பயிற்சி உள்ளிட்ட மாணவர் பல்திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். கிராமத் தத்தெடுப்பு உள்ளிட்ட சமுதாய நலன் சார்ந்த திட்டங்களும் உறுப்புக் கல்லூரிகள் மூலம் செயல்படுத்தப்படும். கல்வியுடன் தனித்திறனையும் மாணவ, மாணவியர் மேம்படுத்திக்கொள்வது அவசியம். உழைப்பு, சிந்தனை, உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவையே வெற்றியைத் தேடித்தரும் என்றார்.