மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் சகதியில் புதைந்து இறந்தனர்.
மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் குணால் (7). அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் திவாகர் (7). இவர்கள் இருவரும் வெளிச்சநத்தத்தில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் குணால், திவாகர் உள்பட 3 சிறுவர்கள் மீனாட்சிபுரம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றனர். அப்போது கண்மாயில் சகதி இருப்பதை அறியாத குணால், திவாகர் இருவரும் அப் பகுதியில் இறங்கியுள்ளனர். அப்போது இருவரும் சகதிக்குள் புதைந்துள்ளனர். கரையில் நின்றிருந்த மற்றொரு சிறுவன் அதைப் பார்த்து சப்தம் போட்டதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் விரைந்து சென்று சகதிக்குள் இறங்கி இரண்டு சிறுவர்களையும் மீட்டு காஞ்சரம்பேட்டையில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சிறுவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் தொடர்பாக எம்.சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த சிறுவன் குணாலின் தந்தை மாரிமுத்து மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். திவாகரின் தந்தை குமார் நாகர்கோவிலில் கூலி வேலை பார்த்து வருகிறார். இதனால் இரு சிறுவர்களும் தாயின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.
அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இருவரும் தங்கள் வீடுகளுக்குத் தெரியாமல் கண்மாய்க்கு குளிக்கச் சென்று சகதியில் சிக்கி இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.