மதுரையில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட மகளிரணித் தலைவர் மீனாம்பிகை தலைமை வகித்தார். பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியது போல குப்பைகளையும் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி பராமரிக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் சாதனையை விளக்கி பாஜக மகளிரணியினர் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வர்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்கப்பட தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாஜக மாநகர் மாவட்ட மகளிரணி செயலர் சுனிதா மல்லாடி, நிர்வாகிகள் கவிதா, சித்ரா, முத்துச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.