குடிநீர் கோரி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஐவத்தாம்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கம்பூர் ஊராட்சிக்குள்பட்ட ஐவத்தாம்பட்டி கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். மேலும், இக் கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் குழாய் கிணற்றிலும் தண்ணீர் கிடைக்கவில்லையாம்.
இதனால் மிகவும் சிரமப்பட்டு வரும் கிராமத்தினர், குடிநீர் வழங்கக் கோரி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஐவத்தாம்பட்டி பகுதியில் போதிய நிலத்தடி நீர்வளம் இல்லை என்றும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.