மதுரை நகரில் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகைப் பொருள்கள் விற்பனை செய்த 131 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மதுரை நகரில் பொது இடங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களில் புகைப் பொருள், புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது.
எனவே, தடையை மீறி இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், மாநகரக் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி, 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 131 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.