சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சோழவந்தான் முதலியார்கோட்டைத் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார் (26), பாண்டி மகன் கிருஷ்ணன்பாண்டி (29) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சோழவந்தானிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது, சோழவந்தான் காமராஜர் சிலை அருகே எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில், இவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே, இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் புதன்கிழமை உயிரிழந்தார். சோழவந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியைச் சேர்ந்த குருசாமி (47) என்பவரைக் கைது செய்தனர்.