ஒன்பது ரூபாயை கூடுதலாக வைத்திருந்ததாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துநருக்கு உரிய பணப்பலன்களை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திண்டுக்கல் மண்டலத்தில் 1994-இல் நடத்துநராகப் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் பணியின்போது, கணக்கில் வராத ரூ.9 ஐ கூடுதலாக வைத்திருந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2001-இல் அதே குற்றச்சாட்டிற்காக மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தில் ராஜூ வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது. ஆனால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் போதிய வருவாய் இல்லாமல் இருந்ததை நிரூபிக்கத் தவறியதால் அவருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டியதில்லை என்று 2016-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜூ மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தவறு செய்தார், பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் போதிய வருவாயுடன் இருந்தார் என்பதை நிர்வாகம் தான் நிரூபிக்க வேண்டும். அது மனுதாரரின் கடமை அல்ல. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது. எனவே கீழ் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரருக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவை 45 நாள்களுக்குள் அமல்படுத்தவில்லை என்றால் நிர்வாகம் மீது மனுதாரர் புகார் செய்யலாம். பணப்பலன்களை வழங்காதது தொடர்பாக மனுதாரர் புகார் அளித்தால் அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.