மதுரையில் ஓய்வூதியம் வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 11-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களின் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாநிலத் துணைச் செயலர் தேவராஜ் தலைமை வகித்தார்.
மதுரை மாவட்டத் தலைவர் கே.வி.குருசாமி, விருதுநகர் மாவட்டத் தலைவர் டி.வி.சீனிவாசன், செயலர் பி.தங்கப்பழம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வி.பி.ஆனந்தன், செயலர் பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மதுரை மத்தியத் தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசும் போது, ஓய்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்படும் என்றார்.
விருதுநகர், திண்டுக்கல் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் திரைப்பட பாடகர் கரிசல் கருணாநிதி மற்றும் குழுவினர் பங்கேற்று பாடல்கள் பாடினர்.