மதுரையில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாநகரக்காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் காந்தி அருங்காட்சியம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாகச் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள், அலங்காநல்லூரைச்சேர்ந்த முத்துவேல்(929), விக்னேஸ்வரன்(23), உசிலம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார்(23), வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த நவீன்குமார்(22) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும், பி.டி ராஜன் சாலையில் மோகனசுந்தரத்திடம் பணம் பறித்தது, யாதவா கல்லூரி அருகே முன்னாள் வட்டாட்சியர் சுரேஷ்குமாரின் மனைவி மல்லிகாவிடம் நகை பறித்தது, கண்ணனேந்தலைச் சேர்ந்த வேலாயுதத்தை தாக்கி பணம், தங்கச்சங்கிலி ஆகியவற்றை பறித்தது, விஸ்வசாந்தி நகரில் ராஜேஸ்வரியிடம் நகை பறித்தது ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை பணத்தை கைப்பற்றினர்.