கூட்டுறவு வீட்டு வசதிசங்க உபரிப் பணியாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் மாற்றுப்பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மற்றும் விருதுநகர் மண்டல நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் வீட்டுவசதி சங்க துணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் எம்.ஜி.சத்தியேந்திர நாத் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ராமச்சந்திரன், மாநிலப் பொதுச் செயலர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மதுரை, விருதுநகர் மண்டலங்களுக்கு உள்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி திட்டங்களால் வீட்டுவசதி சங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.384 கோடி, கடந்த 5 ஆண்டுகளாக வழங்க வேண்டிய சம்பள நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்குவது, அனைத்து சங்கப் பணியாளர்களுக்கும் பாகுபாடின்றி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைள் இதில் வலியுறுத்தப்பட்டன.