சாலைப் பராமரிப்பைத் தனியாருக்கு வழங்கும் முடிவைக் கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சாலைப் பணியாளர்கள் முக்காடு போட்டு ஒப்பாரிப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இப் போராட்டத்துக்கு, சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி.சோலையப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் வி.பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சாலைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாதங்களை பணிக் காலமாக அறிவிப்பது, பணிநீக்க காலத்தின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது, தமிழகம் முழுவதும் சாலைகள் பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
வரும் ஜூலை 10 முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்றும், ஜூலை 8 ஆம் தேதி திண்டுக்கல்லில் மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை இல்லையெனில், ஆக.4 முதல் சென்னையில் நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ராஜா (திண்டுக்கல்), மாரி (சிவகங்கை), சி.முத்தையா (தேனி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.