மதுரையில் ரௌடி வெட்டிக் கொலை

மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடையவர் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடையவர் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 மதுரை மேலஅனுப்பானடி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிடி ஆறுமுகம் (32). இவர் மீது தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
 இவர், புதுராமநாதபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூவர், இவரது வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை ஆயுதங்களுடன் விரட்டிச் சென்ற மூவரும், பாண்டியன் பள்ளம் பகுதியில் சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில் தலை, கழுத்துப் பகுதிகளில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் அளித்தத் தகவலின்பேரில், தெப்பக்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஆறுமுகத்தின் குடும்பத்தினர் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 கொலை தொடர்பாக போலீஸார் கூறியது: கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் காமராஜர்புரத்தில் இருதயராஜா, சட்டப்படிப்பு படித்து வந்த கணேசமூர்த்தி, கார்த்தி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கணேசமூர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் ஆறுமுகமும் ஒருவர்.
 இதனால், கணேசமூர்த்தியின் நண்பர்கள், ஆறுமுகத்தைப் பழிக்குப் பழியாகக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். ஏற்கெனவே, இருமுறை தாக்க முயன்றபோது தப்பிய ஆறுமுகம் வெள்ளிக்கிழமை அவர்களிடம் சிக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com