மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 185 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வந்தது. இதையடுத்து சென்னை, சேலம், திருச்சி, மதுரை அரசு மருத்துவமனைகளில் தினசரி ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதனால் காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே குறைந்து வருகிற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் வந்த நிலையில் தற்போது வெளிநோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி குழந்தைகள் உள்பட 471 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்த 185 பேர் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினர். இதே நிலை நீடித்தால் டெங்குக்காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.
ஆட்சியர் ஆய்வு: இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மருத்துவமனையின் முன்பகுதி மற்றும் நடைபாதையில் தேங்கியுள்ள நீரை அகற்றுமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் காய்ச்சல் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் உடல்நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சைத் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.