திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை வேலைக்குழு உறுப்பினர் நியமனத்துக்கான தேர்தலில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலை நிர்வாகம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனு: திருச்சியில் செயல்படும் துப்பாக்கித் தொழிற்சாலையில், 2017-19ஆம் ஆண்டுக்கான வேலைக்குழு உறுப்பினர் நியமனத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10 வேலைக்குழு உறுப்பினர் நியமனத்தில் பெண்களுக்கென இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
பெண்களுக்கு இரு இடங்கள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, வேலைக்குழு உறுப்பினர் நியமனத் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்து செய்து, பெண் ஊழியர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கை குறித்து துப்பாக்கித் தொழிற்சாலையின் பொதுமேலாளர், தேர்தல் அலுவலர் ஆகியோர் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.