பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் அளவைக் கணக்கீடு செய்வதற்கான கருவியை ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் திங்கள்கிழமை வழங்கினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஊராட்சி செயலர்களிடம் மாவட்ட ஆட்சியர் இவற்றை வழங்கினார்.
சீர்மரப்பினர் நலக் கூட்டமைப்பினர் மனு: இந்த குறைதீர் கூட்டத்தில் சீர்மரபினர் நலக் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஏ.மாரிமுத்து தலைமையில் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு ஒன்றை ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் அளித்தனர். அதில் அனைத்து சீர்மரபினரையும் சீர்மரபினர் நலவாரியத்தில் இணைப்பது, சீர்மரபினருக்கு டிஎன்டி என ஜாதிச் சான்று வழங்குவது, பிற மாநிலங்களில் இருப்பதைப் போல சீர்மரபினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது, சீர்மரபினர் குறைதீர் முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, சீர்மரபினர் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கை நிறைவேறாததை நூதனமாகத் தெரிவிக்கும் வகையில், பிணம் என்ற வாசகம் எழுதிய காகிதத்தை தனது சட்டையில் ஒட்டியவாறு மாலை அணிந்த ஒருவரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அறிவுறுத்தியதையடுத்து அவற்றை அப்புறப்படுத்தினர்.
இந்த குறைதீர் கூட்டத்தில், பயனாளிகள் 28 பேருக்கு முதல்வரின் விபத்து நிவாரண நிதிக்கான காசோலைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 12 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித் தொகைக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். பல்வேறு கோரிக்கைகளுடன் 340 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.