மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான கள்ளிக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளிக்குடி ஒன்றிய மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அரவிந்தன் தொடக்கி வைத்துப் பேசினார். கள்ளிக்குடி ஒன்றியச் செயலர் எஸ்.விஸ்வநாதன் அறிக்கை வாசித்தார். புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன் வாழ்த்திப்பேசினார்.
மாநாட்டில், கள்ளிக்குடி ரயில்வே கீழ் பாலத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளிக்குடிக்கும், கள்ளிக்குடியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை அரசே கொள்முதல் செய்ய, கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். தோட்டப்பயிர்களை மான், காட்டுப் பன்றி ஆகியவற்றிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளிக்குடியில் பொதுக்கழிப்பறை அமைக்க வேண்டும். மதுரை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான கள்ளிக்குடியில் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.