தேசிய அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில் 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவியர் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் தமிழக அணிக்கான கேரம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி மண்டல அளவில் நடைபெற்றது. பின்னர் மாநில அளவிலான தேர்வுப் போட்டி மதுரை அருகேயுள்ள தாய் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில் மண்டல அளவிலான போட்டியில் தேர்வான மாணவியர் பங்கேற்றனர். இதில் 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் சிஇஓஏ பள்ளி மாணவி ஏ.ரித்திகா முதலிடம் பெற்று தமிழக அணியின் மூலம் தேசியப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டும் ஏ.ரித்திகா கேரம் அணியில் பங்கேற்று தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 19 வயதுக்குள்பட்ட பிரிவில் கே.சுருதி தேசிய போட்டிக்கான தமிழக அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். தேசியப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவியரை சிஇஓஏ பள்ளி தலைவர் எம்.ராசாகிளைமாக்சு, இணைத்தலைவர் இ.சாமி, துணைத் தலைவர் எம்.பாக்கியநாதன், இயக்குநர்கள் எம்.விக்டர்தன்ராஜ், செளந்திரபாண்டி, அசோக்ராஜ் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஹேமா ஆட்ரே, நசீம்பானு ஆகியோர் வாழ்த்தினர்.