மதுரை மாநகராட்சியில் பீபீகுளம் வாய்க்கால் பகுதிகளில் இருந்த பெரும்பகுதி வீடுகளில் தேக்கிவைக்கப்பட்ட குடிநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகியிருந்தது கண்டறியப்பட்டது.
மதுரை பீபீகுளம் பகுதியில் ஆணையர் அனீஷ்சேகர் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சோதனையிட்டார். அப்போது பீபீகுளம் நேதாஜி பிரதான சாலை- ரத்தினசாமி நாடார் சாலை சந்திப்பில் வாய்க்கால் தூய்மைப் பணியை பார்வையிட்டார். வாய்க்கால் பணியில் அகற்றப்பட்ட குப்பைகளை அப்பகுதியில் குவிக்காமல் கொண்டு செல்லவும் உத்தரவிட்டார். அப்போது ஒரு கோயிலில் தேக்கிய தண்ணீரில் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தண்ணீரை அகற்றுமாறு கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்பகுதி வீடுகளுக்குச் சென்ற ஆணையர் பெரும்பாலான வீடுகளில் தேக்கிய தண்ணீரில் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகியிருந்ததை அந்தந்த வீட்டினருக்கு சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்தத் தண்ணீரை பொதுமக்களே அகற்றினர்.
ஆய்வின் போது மதுரை மாநகர உதவி நகர்நல அலுவலர் கே.பார்த்திபன், மண்டலம் 2 உதவி ஆணையர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று குறைதீர்க்கும் முகாம்: செவ்வாய்க்கிழமை காலை (நவ.14) மண்டலம் 2 (வடக்கு) அலுவலக வளாகத்தில் சிறப்புகுறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
ஆணையர் அனீஷ்குமார் நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறார். இதனால், மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதித்தல், கட்டட வரைபட அனுமதி மற்றும் தெருவிளக்கு ஆகியவற்றிற்கான அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆணையரிடம் அளிக்கலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.