மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 3,898 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 158 பள்ளிகளில் 4,058 மாணவ, மாணவியர் தேர்வெழுத அழைக்கப்பட்டிருந்தனர். திங்கள்கிழமை காலை நடைபெற்ற தேர்வில் 3, 5 ஆம் வகுப்புகளுக்கு 45 மதிப்பெண்ணுக்குரிய வினாக்களும், எட்டாம் வகுப்புக்கு 60 வினாக்களும் இருந்தன. வினாக்களை வாசிக்கத் தெரியாதவர்களுக்கு ஆசிரியர்களே வாசித்துக்காட்டினர். வினாக்களில் பாடத்திலிருந்து மாணவர் அறிந்துகொண்ட பொது விசயத்தை மையப்படுத்துவதாக கொள்குறி முறையில் இருந்தன.
தேர்வில் 3 ஆம் வகுப்பில் 61 பள்ளிகளைச் சேர்ந்த 1,302 பேரும், 5 ஆம் வகுப்பில் 61 பள்ளிகளைச் சேர்ந்த 1,306 பேரும் மற்றும் 8ஆம் வகுப்பில் 51 பள்ளிகளைச் சேர்ந்த 1,290 பேரும் தேர்வு எழுதினர்.
மதுரை மாவட்டத்தில் தேர்வெழுதிய மையங்களின் கண்காணிப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்வுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆய்வு மைய முதல்வர் பி.செல்வி, துணைமுதல்வர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர். தேர்வு மையத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் 324 மாணவ, மாணவியர் பணிபுரிந்தனர்.
மாணவர் திறனை அறியும் வகையில் நடைபெற்ற இத்தேர்வு முடிவானது வரும் 21 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதில் ஒவ்வொரு மாவட்ட அளவிலான மாணவ, மாணவியர் திறன் அடிப்படையில் தகுதி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்
என்றும் கல்வி அலுவலர்கள் கூறினர்.