மதுரை அரவிந்த் மருத்துவமனை மற்றும் ஆரோக்கியா வேர்ல்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நீரிழிவு நோயாளிகளுக்கான விழிப்புணர்வுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
மதுரை அரவிந்த் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீரிழிவு நோயாளிகளுக்கான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்கள்வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக ஆரோக்கியா வேர்ல்டு நிறுவனத்தின் நிறுவனர் நளினி சாலிகிராம் செய்தியாளர்களிடம் கூறியது:
உலகம் முழுவதும் தொற்றா நோய்களை தடுக்கும் பணியில் ஆரோக்யா வேர்ல்டு தன்னார்வ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 2020-ஆம் ஆண்டுக்குள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி 10 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தநிறுவனம்திட்டமிடப்பட்டுள்ளது.
தேவையற்ற பார்வையிழப்பை அறவே நீக்குதல் என்ற திட்டத்தின் கீழ் நீரிழிவு நோயாளிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரவிந்த் மருத்துவமனையோடு இணைந்து பணியாற்றுகிறோம்.
அரவிந்த் மருத்துவமனைகளுக்கு தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு தினசரி 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு நீரிழிவு நோயைப் பற்றியும், நீரிழிவு தாக்காமல் தவிர்க்கக்கூடிய வழிமுறைகளை தெரிவிப்பதே இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அரவிந்த் மருத்துவமனையின் அனைத்து மையங்களிலும் விழிப்புணர்வு பிரசுரங்கள்பார்வைக்கு வைக்கப்படும். நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அதன் மூலம் நீரிழிவு நோயைத் தவிர்க்கக்கூடிய சிறப்பான வாழ்க்கை முறையை பின்பற்றும் வழிகளை தினசரி குறுஞ்செய்திகளாக பெறலாம். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இந்தத்திட்டம் தொடங்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் அரவிந்த் மருத்துவமனைத் தலைவர் ஆர்.டி.ரவீந்திரன், ஆரோக்கியா வேர்ல்டு நிறுவனத்தின் இந்தியத்தலைவர் மீத்தா வாலவேலகர் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை நடையாளர் சங்கம், மதுரை கண் மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கே.கே.நகரில் உள்ள பூங்கா முன்பு பேரணியை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர் தொடங்கி வைத்தார். பேரணி ஆவின் வழியாக அரவிந்த் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.