மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைப்பெற்று வந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்வேலிப்பட்டியைச் சேர்ந்தவர் வர்ஷினி(19). மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்ஷினி, அலங்காநல்லூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில், காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதே போல டெங்குவால் பாதிக்கப்பட்ட மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாயாண்டி (51), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஜாபர் அலி (53), மதுரை மாவட்டம் பேரையூர், கோடங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி அம்மாள் (52) ஆகியோரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டியைச் சேர்ந்த வேளாங்கன்னி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குசிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.