மதுரை மாவட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பங்கேற்கும் சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலக கழிப்பறை தின விழா, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம், ஏற்குடி அச்சம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமை வகித்தார்.
கழிப்பறைகளின் அவசியம் மற்றும் அவற்றை பயன்படுத்த வேண்டிய தேவைகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டது.
இதில், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடங்கிய சுகாதாரக் குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன.
குழுவில் பங்கேற்ற பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் தனித்தனியாக அழைத்த மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், சுகாதாரம் குறித்து அவர்களை பேசவைத்தார்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரையானது, மாசில்லா மதுரை என்ற நிலையை அடைய அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். மாவட்டத்தில் கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை அனைவரும் தவறாது பயன்படுத்தவேண்டியது அவசியம் என்றார்.
ஆட்சியர் தலைமையில் சுகாதார உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். பின்னர், ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வுக் குழுக்கள், சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. திருமங்கலம் ஒன்றியம் புதுப்பட்டியிலும் கழிப்பறை தின நிகழ்ச்சி நடைபெற்றது.