பெரியாறு-வைகை அணைகளில் நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கனஅடியை கடந்துள்ளதால், ஒருபோக பாசனப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறக்குமாறு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலூர் தாலுகா மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது தாலுகா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தாலுகா குழு உறுப்பினர்கள் கே. மணி, ஏ. ராஜேஸ்வரன், கே. கல்யாணி, ஏ. சாகுல்ஹமீது ஆகியோர் தலைமை வகித்தனர்.
இம் மாநாட்டில், 2 ஆண்டுகளாக விவசாயம் நடைபெறாத மேலூர் ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு பெரியாறு-வைகை அணைகளில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்கவேண்டும். நீர் திறப்பதில் ஏற்கெனவே அமலில் உள்ள விதிகளை கடைப்பிடிக்கவேண்டும்.
மேலூர் தாலுகா அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து அவசரச் சிகிச்சைப் பிரிவை செயல்படுத்தவேண்டும்.
மேலூர் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலவசக் கழிப்பறையை பொதுமக்கள் உபயோகத்துக்கு திறந்துவிடவேண்டும்.
அழகர்கோவில் கோட்டை வளாகத்தில் இலவச கழிப்பறை வசதியை கோயில் நிர்வாகம் செய்துதரவேண்டும். மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கருகி பட்டுப்போன மா, தென்னை மரங்களுக்கான இழப்பீட்டை அரசு உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், மாநிலக் குழு செயலர் ஜி. ராமகிருஷ்ணன், உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி. இளங்கோவன், ப. ரவி மற்றும் பலர் பேசினர்.
முன்னதாக, கட்சியின் செயலராக எம். கண்ணனும், தாலுகா குழு உறுப்பினர்களாக 9 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.